வரவர இந்தி ஃபீல்டு மாதிரி ஆகி வருகிறது தமிழ் ஃபீல்டும். ஒரு படத்தில் நாலைந்துஹீரோக்கள் ஈகோ இல்லாமல் நடிக்கிற விஷயத்தில்தான் இந்த வியத்தகு மாற்றம். ஜீவா படத்தில் ஆர்யா நடிப்பதும், சூர்யாவுடன் விக்ரம் நடிப்பதும், விஷாலும் ஆர்யாவும் மாப்ளே மச்சானாகி குழைவதுமாக ஆரோக்கியமாகதான் இருக்கிறது ஃபீல்டு. (முகமூடி ஊத்திக்கிச்சுடோய்... என்று நடுநடுவே கொடுக்கப்படும் பார்ட்டிகள் இந்த கணக்கில் இல்லை)
ரசிகர்களுக்கு தரப்படுகிற இந்த பால் பாயாச பரவசத்தில் மேலும் ஒரு முந்திரியை போட்டிருக்கிறார் சுந்தர்சி. தற்போது அவர் இயக்கிக் கொண்டிருக்கும் மதகஜராஜாவை தொடர்ந்து நான்கு முக்கிய ஹீரோக்களை ஒன்றிணைத்திருக்கிறார்.
விஷால், ஜீவா, ஆர்யா, ஜெயம் ரவி ஆகிய நால்வரையும் ஒரே படத்தில் நடிக்க வைக்கப் போகிறார். இதற்கான பேச்சு வார்த்தைகள் மிக சுவாரஸ்யமாக துவங்கி அதே சுவாரஸ்யத்தோடு முடிந்திருக்கிறது. இந்த அதிமுக்கியமான படத்தில் அச்சுபிச்சு வில்லனாக நடிக்கிறாராம் சந்தானம். பின்னே... அவரு இல்லாமலா?