பாடல் வெளியீட்டு விழாக்களை கோடம்பாக்கத்தின் எல்லையை விட்டு வெளியேநடத்துவதில் அலாதி ஆனந்தம் கொள்கிறார்கள் சினிமாக்காரர்கள். மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்காவின் லாஸ்வேகாஸ் என்று எங்கெங்கோ போய் இந்த ஆடியோ விழாக்களை நடத்தும் சினிமாக்காரர்கள் மத்தியில், நாலு ஸ்டெப் தள்ளி விழாவை நடத்தப் போகிறார் ஷங்கர். இவரது நண்பன் படத்தின் பாடல் வெளியீட்டு விழா கோயமுத்துரில் நடைபெற இருக்கிறது.
இந்த விழாவை ஏன் கோவையில் வைக்க வேண்டும்? அதற்கும் ஒரு காரணம் இருக்கிறது. அது கடைசியில்...
எதிர்வரும் 23 ந் தேதி கோவை எச்ஐடி காலேஜ் வளாகத்தில் மாலை 5 மணிக்கு இந்த விழா நடைபெற இருக்கிறது. விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோருடன் படத்தின் ஹீரோயினான இலியானாவும் கலந்து கொள்ளப் போகிறாராம். இப்பவே அரங்கத்தின் டிக்கெட்டுகளை பிளாக்கில் 5 ஆயிரம் 10 ஆயிரம் என்று விற்க ஆரம்பித்து விட்டார்களாம் சிலர்.
இப்படி ஒரு விழாவை நடத்த முடிவு செய்தவுடன், அதை என்னோட மியூசிக் கான்செர்டுக்கு நடுவில் வச்சா என் நிகழ்ச்சிக்கும் கூட்டம் வருமே என்றாராம் ஹாரிஸ் ஜெயராஜ். உலகம் முழுக்க சுற்றி இப்படி ஒரு இசை நிகழ்ச்சி நடத்த முடிவெடுத்திருந்தார் ஹாரிஸ். ஆனால் முதல் நிகழ்ச்சியே படு பெயிலியர். இதனால் அதிருப்தியுற்ற அவர், வெளிநாட்டில் நடைபெறவிருந்த அத்தனை நிகழ்ச்சியையும் கேன்சல் செய்துவிட்டார். இந்த நிலையில்தான் இப்படி ஒரு வேண்டுகோள்.
ஐயோ பாவம் என்று நினைத்த ஷங்கர், போகட்டும். கோவையிலேயே நிகழ்ச்சியை நடத்துங்க என்றாராம் தயாரிப்பு நிறுவனத்திடம். இங்கிருந்து நிகழ்ச்சிக்கு வர இசைந்திருக்கும் அத்தனை பேருக்கும் ஃபிளைட், தங்கும் ஓட்டல்கள் என்று கொள்ளை கொள்ளையாய் பில்லை கிழித்துக் கொண்டிருக்கிறார்கள் தயாரிப்பு நிறுவனத்தில்.