Thursday, 24 November 2011

காமெடியில் கலக்கும் ஸ்ரீகாந்த்


இப்போது ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவாவுடன் இணைந்து நண்பன் படம் நடித்து வருகிறார். இந்த நிலையில் புதிதாக ஒரு படத்தில் தனி ஹீரோவாக நடிக்கிறார்.


பாகன் என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஸ்ரீகாந்தின் ஜோடியாக நடிக்கிறார் ஜனனி அய்யர்.

முகமது அஸ்லம் இயக்குநராக அறிமுகமாகிறார். தனது முதல் படத்திலேயே காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து, எடுக்கிறார் அஸ்லம்.

பாகன் படம் குறித்து அவர் கூறுகையில், "காமெடி கலந்த ஜனரஞ்சகப் படம் பாகன். காதல், ஆக்ஷன், சென்டிமெண்ட், வயிற்றைப் பதம் பார்க்கும் அளவுக்கு காமெடி என பக்கா பொழுதுபோக்குப் படம் இது. ஸ்ரீகாந்துக்கு சந்தேகமே இல்லாமல் ஒரு சிக்ஸர் இந்தப் படம். காட்சிக்குக் காட்சி காமெடியில் பின்னிப் பெடலெடுத்துள்ளார் ஸ்ரீகாந்த். அவருக்குள் இத்தனை பெரிய நகைச்சுவை கலைஞர் ஒளிந்திருந்தாரா என எல்லாருமே கேட்கும் அளவுக்கு காட்சிகள் சிறப்பாக வந்துள்ளன. ரஜினி சாருக்கு ஒரு தில்லுமுல்லு மாதிரி, ஸ்ரீகாந்துக்கு இந்தப் பாகன் அமையும்," என்றவரிடம் படத்தின் கதை குறித்து கேட்டோம்.

"உருவத்தில் பெரிய யானையை சிறிய உருவம் கொண்ட பாகன் அடக்கி ஆள்கிறான். அதுபோல பிரச்சினைகள் நிறைந்த இந்த பெரிய வாழ்க்கையை சமாளித்து வாழ்பவனே ஹீரோ. வாழ்க்கையில் அதிகம் சம்பாதிக்க ஆசைப்பட்டு வெளிமாநிலம், வெளிநாடு செல்லுவோர் மத்தியில், வாய்ப்புக் கிடைத்தும் வெளிநாடு செல்லாமல் தன் சொந்த மண்ணில் உழைத்து முன்னேறுகிறான் இந்த பாகன். இந்த மண்ணின் மீது அவ்வளவு காதல். 

என் படத்தில் என் குருநாதர்கள் சேரன், அமீர், ராதா மோகன் பாதிப்பு இருக்கும். காரணம், அவர்களைப் பிடித்துப் போய், அவர் படங்களை ரசித்து அவர்களுடன் பணியாற்றியவன் நான். அதனால் என் படைப்பிலும் அவர்களின் பாதிப்பு இருக்கும். அது தவறும் அல்ல," என்றார் முகமது அஸ்லம். 

ஸ்ரீகாந்துக்கு ஜோடியாக அவன் இவன் படத்தில் நடித்த ஜனனி அய்யர் நடிக்கிறரா. ஸ்ரீகாந்தின் அம்மாவாக கோவை சரளாவும், அப்பாவாக மதராசப்பட்டினம் ஜார்ஜும், நண்பர்களாக வெண்ணிலா கபடி குழு சூரி, அங்காடித் தெரு பாண்டியும் நடிக்கின்றனர்.

No comments:

Post a Comment